தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம்
தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் 02-1864
(வருவாய் நிலை ஆணை எண்:41)
அரசுக்கு சேரவேண்டிய நிலவரித் தொகையினை பட்டாதாரர்களிடமிருந்து வசூலிப்பதற்கு
தேவைப்படும் நேர்வுகளில் இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படுவதாகும்.
சில விளக்கங்கள்:
நிலமுடையவர் : நிலத்தீர்வையை அரசினருக்கு செலுத்துவதற்குட்பட்டு நிலத்தின்
உடைமையை தம்மிடம் கொண்டுள்ளவர்.
தீர்வை : அரசினருக்கு செலுத்துகிற
அல்லது செலுத்த வேண்டிய தொகை ”தீர்வை” எனப்படும்.
குத்தகை : நிலமுடையவர்களுக்கு தங்கள்
குடிகள் செலுத்தும் தொகைக்கு குத்தகை என 1908-ம் ஆண்டு (1-1908) தமிழ்நாடு எஸ்டேட்
நிலச்சட்டத்தின் கீழ் பெயர் தரப்பட்டுள்ளது.
வருவாய் : 1905-ம் ஆண்டு சட்டத்தின்
9-வது பிரிவில் விளக்கப்பட்டுள்ளவாறு, அரசினருக்கு சொத்தாக உள்ள நிலங்களில் அனுமதி
பெறாமல் செய்யப்பட்டுள்ள ஆக்ரமணத்திற்கு விதிக்கப்படும் தீர்வையும், தண்டத் தீர்வையும்
அச்சட்டத்தின் 2-வது பிரிவின் கீழ் வருவாய் எனக்
கருதப்படும்.
நிலம் : நிலத்தின் எந்தப் பாகத்திற்குத் தீர்வை செலுத்தப் படாமல் பாக்கி நிற்கிறதோ,
அந்தப்பாகத்தை மட்டுமல்லாமல், குடியானவரின் உடைமையில் உள்ள நிலங்கள் எல்லா வற்றையும்
குறிக்கும்.
நிறைவேற்று நடைமுறைகள்:
நிறைவேற்றுக் கட்டளையைக் கொண்டு (ஜப்தி ஆணை) வசூலிப்பதற்குரிய சொத்து: அரசினருக்கு
செலுத்தப்பட வேண்டிய தொகையை செலுத்தத் தவறியவரின் அசையும் அல்லது அசையாப் பொருளையோ
அல்லது அவ்விரண்டையுமோ யுக்தானுசாரம் போல விற்பனை செய்து பாக்கியாக நிற்கும் தொகையினை
(வசூலிப்பதற்காகும் செலவுடன் சேர்த்து) அரசுக்கு சேர்க்கப்பட வேண்டும்.
விற்பனை செய்ய அதிகாரம்: மாவட்ட ஆட்சித்தலைவர் அவரால் அங்கீகாரம் வழங்கப்பட்ட
அலுவலர் - தாலுக்கா தாசில்தார்.
கூட்டுக்குடும்பம் பாகப்பிரிவினையாகாத சொத்து: கூட்டுக்குடும்பத்தின் உறுப்பினர்
ஒருவரின் தனித்த முறையில் உள்ள கடமைக்காகச் செலுத்தப்பட வேண்டிய பாக்கியினை வசூலிப்பதற்கு
அக்கூட்டு குடும்பத்தின் பாகப்பிரிவினையாகாத சொத்தின் மீது இச்சட்டத்தின் கீழ்
(1864-ம் ஆண்டு சட்டம்) நடவடிக்கை எடுக்கக் கூடாது.
ஜப்தி செய்வதிலிருந்து விதி விலக்கு:
ஜப்தி செய்ய விவசாயிகளின் சொத்துக்களில்
குறிப்பிடப்பட்ட சில வற்றை பொறுத்த மட்டில் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
1.ஒவ்வொரு விவசாயின் விவசாயக் கருவிகள்.
2.ஒரு ஜதை உழவுக் கால்நடைகள்
3.தாலி அல்லது திருமண மோதிரம் ஆகிய உடலணிகலன்கள் (வழக்க முறை அல்லது சமயக் கொள்கைகளை
அனுசரித்து ஒரு மாதிடமிருந்து எடுத்துவிடத்தகாதவை)
4. வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள்
ஜப்தி ஆணை பிறப்பிக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரம் :
1. தாசில்தார்
2. தாலுக்கா தலைமை கணக்கர்
3. நில வருவாய் ஆய்வாளர்கள் (தங்கள் சரகத்தின் கிராமங்களில் பாக்கியாக நிற்கும்
தொகைகளை பொருத்தமட்டில்)
அசையும் சொத்துக்களை ஜப்தி செய்தல்:
படிவம் -1(ஜப்தி ஆணை) :
1.சூரிய உதயத்திற்குப் பின்னரும்,
சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் ஜப்தி செய்யப்பட வேண்டும்.
2.தொகை செலுத்தத் தவறியவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
3.ஜப்தி ஆணை காட்டப்பட்டால். அவர் பாக்கித் தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும்.
4.செலுத்தப்படாவிட்டால் ஜப்தி செய்யும் அலுவலர் ஜப்தி செய்யலாம்.
5.சொத்து ஜப்தி செய்யப்படுகிற தினத்தில்
இந்த ஆணையின் நகல் அவரிடம் கொடுக்கப்பட வேண்டும்
படிவம்-2 (ஜப்தி செய்யப்பட்ட சொத்தின்
பொருள் பட்டியல்): ஜப்தி செய்யப்பட்ட தினத்தில், ஜப்தி ஆணை நகல் கொடுக்கும் போது ஜப்தி
செய்யப்பட்ட சொத்துப் பட்டியல் (படிவம்-2) நகலொன்று ஜப்தி செய்யப்பட்ட சொத்து வைக்கப்பட்டிருக்கும்
இடத்தைக் குறிப்பிட்டு கொடுக்கப்பட வேண்டும்.
படிவம்- 3 (அசையும் பொருள் விற்பனை அறிவிப்பு) : இந்த
அறிவிப்பு, தொகை செலுத்த தவறியவரின் வீட்டில் அல்லது (சூழ்நிலைக்கேற்றவாறு) ஜப்தி செய்யப்பட்ட
சொத்தின் சுற்றுப்புறத்தில் ஒட்டப்பட வேண்டும்.
இந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட சுற்றுப்புறத்தில் ஒட்டப்பட்ட தேதியிலிருந்து பதினைந்து தினம் கழிந்த
பின்னர் தான் ஏலம் விடப்பட வேண்டும்.
ஜப்தி செய்யப்பட்ட சொத்து விடுவித்தல் : விற்பனை நாளுக்கு முந்தைய நாளில், சூரியன் மறைவதற்கு
முன்னர் பாக்கியும், செலவுத்தொகையும் செலுத்தப்படுமேயானால், 10வது பிரிவின் கீழ் பாக்கியை
செலுத்தத் தவறியவரின் சொத்து விடுதலை செய்யப்பட
வேண்டும்.
அசையா சொத்துக்கள்:
படிவம்-4 (நிலம் ஜப்தி செய்வதற்கு முன்னதாக பாக்கியை செலுத்துமாறு கேட் பது): நிலத்தினை ஜப்தி செய்வதற்கு முன் கேட்பு அறிவிப்பு,
தொகை செலுத்தத் தவறியவருக்கு சேர்க்கப்படுவதும் தவிர நகலொன்றும் அவருக்கு கொடுக்க வேண்டும்.
செலுத்துவதற்கு கால அளவு நிர்ணயித்தல்:
பாக்கி நிற்கும் நிலத்திற்கும் தொகை செலுத்த வேண்டிய இடத்திற்குமான தூரத்தை
கவனித்து செலுத்துவதற்கு தேவையான கால அளவை நிர்ணயிக்க வேண்டும்.
சார்வு செய்யும் முறை:
இந்த அறிவிப்பு நகலை, தொகை செலுத்த தவறியவரிடமாயினும், அவர் சாதாரணமாக இருக்கும்
இடத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த யாதொரு ஆண் இனத்த வரிடமாவதும்,
அதிகாரம் பெற்ற அவர் பிரதிநிதியிடமாயினும் கொடுக்கப்பட வேண்டும்.
அல்லது
அதன் நகலொன்றை அவர் கடைசியாக வசித்து வந்ததாக தெரியவரும் இடத்தில் எடுப்பாய்
தெரியுமாறு ஒரு பாகத்திலாகிலும்.
அல்லது
ஜப்தி செய்யப்படும் நிலத்தில் எடுப்பாய் தெரியுமாறு ஒரு பாகத்திலாகிலும் ஒட்டப்பட
வேண்டும்.
(இவ்வாறு செய்யப்பட்ட விதம் அறிவிப்பு சேர்ப்பிக்கிற வரால் எழுதப்பட வேண்டும்.)
படிவம் -5 (ஜப்தி அறிவிப்பு) : ஜப்தி
செய்வதற்கான விபரமடங்கிய அறிவிப்பாகும். இந்த அறிவிப்பு ஜப்தி செய்யப்பட்ட நிலத்தில்
எடுப்பான பாகத்தில் ஒட்டப்பட வேண்டும்.
ஜப்தி செய்யப்பட்ட நிலத்தில் பகிரங்கமாக விளம்பரம் செய்து மாவட்ட அரசிதழிலும்
விளம்பரம் செய்ய வேண்டும்.
(இராணுவத்தில், பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தீர்வை செலுத்த தவறியமைக்காக, நிலத்தை
விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்பாக, அவரது ராணுவத் தலைமை அதிகாரி வழியாக தெரிவிக்கப்பட
வேண்டும்.
மேலும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல்
பெறப்பட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் ஒப்புதல் செய்யுமுன், வருவாய் நிர்வாக ஆணையரின்
ஆணை பெறப்பட வேண்டும்).
படிவம்-6 (சொத்தின் நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்டதற்கான அறிவிப்பு) : ஜப்திக்கும்,
விற்பனைக்கும் இடைக்காலத்தில் மேலாண்மை செய்வது இன்றியமை யாதது என தோன்றினாலன்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் கூடாது.
வருவாய் நிர்வாக ஆணையரின் ஒப்பளிப்பு அவசியம் பெற்றிருக்க வேண்டும்.
(சார்வ் செய்யும் முறை - படிவம் -4 அறிவிப்புக் குள்ளவாறும் மற்றும் மாவட்ட
அரசிதழில் விளம்பரம் மற்றும் நிலத்திலும் விளம்பரம் செய்ய வேண்டும்.
படிவம் - 7 நில விற்பனை அறிவிப்பு) : இந்த அறிவிப்பு ஆங்கிலத்திலும்,
மண்டல மொழியிலும் இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் - தாலுக்கா அலுவலகம்
- அதன் அருகில் உள்ள காவல் நிலையம் -சம்பந்தப்பட்ட நிலத்தின் எடுப்பான ஒரு பக்கத்திலும்
விற்பனை நடப்பதற்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னதாக ஒட்டி வைக்க வேண்டும்.
படிவம் -7(அ) (நில விற்பனைகளின் அறிவிப்பு) : விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டிருக்கும் தேதிக்கு
குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பினை மாவட்ட அரசிதழில் மாவட்ட
மண்டல மொழியில் விளம்பரம் செய்ய வேண்டும்.
படிவம் -8 (விற்பனை சான்று பத்திரம்) : டெபுடி கலெக்டர் - வருவாய் கோட்ட அலுவலரால்
விற்பனை யினை உறுதி செய்து சான்று பத்திரங்கள் கொடுப்ப தாகும்.
படிவம் எண் -9 : விற்பனை செய்யப்பட்ட நிலங்களின் பதிவேடு
படிவம் எண் -10:(நிலத்தை ஏல விற்பனையில் வாங்கியதைப் பற்றிய அரசாங்க அறிவிப்பு): அரசாங்கத்தின் அறிவிப்பை சம்பந்தப்பட்ட நிலங்கள் இருக்கும் கிராமங்களிலும், தாலுக்கா அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் விளம்பரம் செய்வ துடன்
மாவட்ட அரசிதழிலும் விளம்பரம் செய்ய வேண்டும்.
ஏல விற்பனை நிறுத்தல் : செலுத்தத்தவறியவராயினும்,
அவருக்காக எவராயினும் அல்லது சம்பந்தப்பட்ட நிலத்தில் உரிமையை கொண்டாடுகிற வேறு எவராயினும்,
வட்டியுடன் தீர்வை பாக்கி முழுவதையும் ஏனைய செலவுகள் உட்பட ஏலத் தேதிக்கு முந்தைய தினம்
சூரியன் மறைவதற்கு முன்னதாக செலுத்தி விடுவாரெனில் ஏல விற்பனை நிறுத்தப்பட வேண்டும்.
முக்கியக் குறிப்பு:
மேற்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, 1864-ம் ஆண்டு ஐஐ -வது சட்டத்தின்
கீழ், சட்டத்திற்கு விரோதமானவையும், முறைகேடுகளும் வருவாய் நில ஆணை எண்:41 பத்தி
26ன் கீழ் இணைப்பு III –ல் கொடுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக