செவ்வாய், 29 ஜனவரி, 2019

வாரிசுச் சான்றிதழ், இறங்குரிமை சான்றிதழ்


வாரிசுச் சான்றிதழ்

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.

ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும்பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம்.
ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது.

நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை.

இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்.

பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும்.

வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

சமீபத்தில் இறந்துபோன அந்த தொழிலதிபருக்கு, ஒரு மகன் மற்றும் திருமணம் ஆன இரண்டு மகள்கள்.

தொழிலதிபர் பல்வேறு நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்து வைத்திருந்தார். அந்த முத லீடுகளை தங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய அவரது வாரிசுகள் கேட்டனர்.

இதற்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் தந்தார்கள்.

ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனமோ, வாரிசுச் சான்றிதழ் மட்டும் போதாது, நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) இருந்தால்தான் முதலீடுகளை மாற்றித்தருவோம் என்று சொல்லிவிட்டது.

வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?

அது ஏன் முக்கியம்? என்பதே பலருக்கும் தெரியாத நிலையில், நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் என்றால் என்ன?

வாரிசுச் சான்றிதழுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

அதை எப்படி வாங்க வேண்டும்? என்கிற கேள்விகள் பலருக்கும் உண்டு.

ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணப் பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகப் பெறப்படும் சான்றிதழ் தான் வாரிசுச் சான்றிதழ்.

எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திரு மணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள்.

திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

இதை எப்படி பெறுவது?

சாதி சான்றிதழ் வாங்குவதற்கு என்ன நடைமுறையோ, அதுதான் வாரிசுச் சான்றிதழ் வாங்குவதற்கும்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய மனுவுடன் இறந்தவரின் இறப்பு சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் வசிப்பிடச்சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.

எப்போது மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்னைகள் இருப்பது, தத்து எடுக்கப் பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது,

நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம்.

நீதிமன்றத்தை அணுகி யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.

ஏனெனில், யார் வாரிசு என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் வட்டாட்சியருக்கு கிடையாது.

பிரச்னைக்குரியவர்கள் நீதி மன்றத்தை அணுகி இறந்தவருக்கும் தனக்கும் இருக்கும் உறவை நிரூபித்து, அவரது வாரிசு என்று கோரும் தகுதியை உணர்த்துவதன் மூலமே அவர் பெயருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.

எதற்கு வாரிசுச் சான்றிதழ்?

பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கு, பொதுத்துறை நிறுவன ங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணி பலன்கள் பெறுவதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத் தொகையைப் பெறுவதற்கும்,

கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்பு பெறவும் பயன்படுகிறது.

இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ உள்ள வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

இறங்குரிமை சான்றிதழ்

இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.

எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம்.

ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப் பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதிமன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுதாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.

அந்த இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் நிறுவனங்கள் முதலீடுகளை / பங்குகளை பெயர் மாற்றமோ அல்லது பணத்தை திருப்புவதையோ தயக்கமில்லாமல் செய்து தரும்.

இறந்தவருடைய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துகளை அடைவதற்கு அல்லது அடமானம் வைப்பதற்கு இறங்குரிமை சான்றிதழ் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மாவட்ட அலுவலக நடைமுறை நூல் (VOL.2)