திங்கள், 28 ஜனவரி, 2019

ஆக்ரமணம்


ஆக்ரமணம்


அரசைச் சேர்ந்த நிலங்களான புறம்போக்கு, புஞ்சைத்தரிசு, நஞ்சைத்தரிசு போன்ற நிலங்களில்  செய்யப்படும் அனுபோகங்கள் ஆக்ரமணம் எனப்படும், 1905ம் ஆண்டு தமிழ்நாடு 3வது சட்டத்தில் ஆகரமிப்புகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை முறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய் நிலை ஆணை எண் 26ல் ஆக்ரமணம் குறித்து விரிவான விளக்கம் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அனுபோகம் என்பது நிலத்தை தற்காலிகமாகவோ அல்லது நிலையாகவோ பயனாக்கி கொள்ளும் உத்தேசம் கொள்வதாகும் அதாவது பொதுமக்களால் குறிப்பிட்ட செயலுக்காக  பயன்படுத்தப்பட வேண்டிய அரசு நிலங்களை அனுமதியின்றி தனியாரால் சொந்த நன்மைக்காக ஆக்ரமித்துக் கொண்டு பயன்படுத்துவது என்பதாகும். 

அரசுக்கு சொந்தமான நிலங்கள் என்பவை சட்டத்தின் 2 வது பிரிவில் விளக்கப் பட்டுள்ள அரசினர்  சொத்து நிலங்கள், உள்ளாட்சி கட்டுப்பாட்டில் உள்ள பொது சாலைகள், தெருக்கள் மற்றும் இருப்பு பாதை நிலங்களும் இதனில் அடங்கும்.

அனுமதி பெறாமல் செய்யப்படும் அனுபோகங்கள்(ஆக்ரமணங்கள்) பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அனுபோகங்கள் நிலையானதாகவோ அல்லது தற்காலிகமானதாகவோ இருந்தாலும் ஆட்சேபணையற்றவை.

அனுபோகங்கள் தற்காலிகமானது எனில் ஆட்சேபணையற்றவை. நிரந்தரமானது எனில் ஆட்சேபணையுள்ளது.

அனுபோகங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிலையானதாகவோ இருந்தாலும் ஆட்சேபணையுள்ளவை.
     
மேற்குறிப்பிடப்பட்ட இனங்களில் வரிசை எண் 1 ல் காட்டப்பெற்றுள்ள ஆட்சேபணையற்ற ஆக்ரமணத்திற்கு நில ஆக்ரமணசட்டத்தின் 3வது பிரிவு(1) (2) உட்பிரிவில் கண்டுள்ள விதிகளின் கீழ் அறிவிப்பு தரவேண்டிய அவசியம் இல்லை. இவ்வினங்களுக்கு அபராதம் விதிக்காமல் சாதாரண தீர்வை மட்டும் விதித்தால் போதுமானது. 

புஞ்சை, அனாதீனமாக இருந்தால் அரசு நீர் நிலை ஆதாரங்களிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ள பட்டிருப்பின் அதற்கு தீர்வை ஜாஸ்தி வசூல் செய்யப்பட வேண்டும்.

அனுபோகம் செய்யப்பட்ட நிலம் தீர்வை விதிக்கப்பட்டதாக இருப்பின் வருவாய் நிலை ஆணை 15 பத்தி 7 ல் வகுக்கப்பட்டுள்ள விதிமுறையை அனுசரித்து ஒப்படை செய்ய நடவடிக்கை எடுக்கலாம். அனுபோகம் செய்யப்பட்ட நிலம் தீர்வை விதிக்கப்படாத நிலமாயிருப்பின் அது உடனடியாக தீர்வை விதிக்கப்பட்ட  நிலமாக மாற்றப்பட்டு வருவாய் நிலை ஆணை 15 பத்தி 39ல் வகுக்கப்பட்டுள்ள விதி முறையை அனுசரித்து ஒப்படை செய்ய நடவடிக்கை எடுத்திடலாம். 

அனுபோகம் செய்யப்பட்ட நிலம் கிராம அல்லது நகர வீட்டு மனையாக இருப்பின் நிலை ஆணை 21ல் வகுக்கப்பட்டுள்ள விதிமுறையை அனுசரித்து ஒப்படை செய்ய நடவடிக்கை எடுத்திடலாம்.

வரிசை எண் 2 மற்றும் 3ல் காட்டப் பெற்றுள்ள ஆட்சேபகரமான அனுபோகங்களுக்கு

i)
  தீர்வையுடன் தண்டத்தீர்வையையும் கூடுதலாக விதிக்கலாம்.

ii) தீர்வையும் தண்டத்தீர்வையும் விதிப்பதுடன் அனுபோகம் செய்திருப்போரை நிலத்திலிருந்து அப்புறப்படுத்திடலாம்.
   

iii) தீர்வை மட்டும் விதித்து தண்டத்தீர்வையின்றி உடனடியாக அனுபோகம் செய்திருப்போரை அப்புறப்படுத்திடலாம்.

ஆட்சேபகரமான ஆக்ரமணங்களை காலி செய்திட நில ஆக்ரமண சட்டம் 1905ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் ஆக்ரமண தாரர்களுக்கு ஒரு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். 

இந்த அறிவிப்பில் ஒரு குறிப்பிட்ட நபர் அந்த நிலத்தில் ஆக்ரமணம் செய்துள்ள பரப்பின் அளவு மற்றும் அதற்கு செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றை குறிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து 1905ம்  ஆண்டு 3வது  சட்டம் 7வது பிரிவின் கீழ் அறிவிப்புகள் அனுபோகம் செய்பவர் ஒவ்வொருவரிடமும் சேர்ப்பிக்கப்பட வேண்டும். 

மேலும் 3(1)வது பிரிவின் கீழ் நிலத்திற்குரிய முழு தீர்வையுடன் அல்லது தீர்வை விதிக்கப்படாத நிலமானால் சட்டத்தின் 3(1)வது பிரிவில் குறிப்பிட்ட வீதத் தீர்வையுடன் 5வது  பிரிவின் கீழ் விதிக்கதக்க தண்ட தீர்வை ஏன் விதிக்கக் கூடாது அல்லது அந்நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவதுடன் அந்நிலத்திலுள்ள பயிர்விளைச்சல் /  கட்டுமானங்கள் போன்றவற்றை சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்பதற்கான காரணங்கேட்டு 7 வது பிரிவின் கீழ் பிறப்பிக்கப்படும் அறிவிக்கை அவருக்கு அனுப்பப்படவேண்டும். 

7 நெம்பர் நோட்டீசில் காலி செய்வதற்குரிய காலக் கெடுவிற்கான தேதி குறிப்பிட்டு நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு வார காலத்திற்குள்/ 10 நாளைக்குள்ளாக என குறிப்பிடக் கூடாது பின்னர் ஆக்ரமிப்பை காலி செய்வதற்கு உத்திரவிட்டு மேற்படி சட்டத்தின் கீழ் 6 வது பிரிவின் கீழ் ஆக்ரமண தாரருக்கு அனுப்ப வேண்டும்.

சட்டப்பிரிவு 6(1)ன் கீழ் அப்புறப்படுத்த பிறப்பிக்கப்படும் அறிவிப்பில் நிலத்தில் பயிர் அல்லது விளைச்சல் இருக்கும் இனங்கள், கட்டிடம் அல்லது மற்ற கட்டுமானங்கள் உள்ள இனங்கள் அல்லது வேறு எவையேனும் விட்டு வைக்கப்பட்டிருக்கும் இனங்கள் ஆகியவற்றின் கால அளவு நிர்ணயிக்கபபட வேண்டும். 

அதன்படி அப்புறப்படுத்தப்படாவிட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட வேண்டும். குறிப்பிடப்பட்ட தேதி வரையில் நிலத்திலிருந்து ஆக்ரமிப்பை அப்புறப்படுத்துவதை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஆக்ரமிப்பு அகற்றப்பட வேண்டிய நேர்வுகளில் ஆக்ரமணதாரருக்கு மேற் குறிப் பிடப்பட்டவாறு மூன்று அறிவிப்புகளும் (5,7 மற்றும் 6) தவறாது கொடுக்கப்பட வேண்டும்.  

ஆக்ரமிப்புகளை காலி செய்யக்கோரி அனுப்ப பெறும் அறிவிப்புகளை அனுபோக தாரர்களிடமோ அல்லது அவரது அதிகாரம் பெற்ற பிரதிநிதியிடமோ நேரடியாக வழங்கிடலாம். இவ்வாறு சார்பு செய்ய இயலவில்லையென்றால் ஆக்ரமணதாரர் வசிக்கும் இடத்திலோ அல்லது ஆக்ரமணப் பகுதியிலோ ஒட்டி சர்வு செய்து இதற்கு ஆதாரமாக சாட்சி கையெழுத்து பெறவேண்டும். 

அனுபோகத்தை அப்புறப்படுத்த பிறப்பிக்கப்படும் ஆணை எந்தபசலியில் பிறப்பிக்கப்பட்ட  போதிலும் அந்த பசலி முடிவுற்ற பின்னரும் அது நிறைவேற்றதக் கதாகும்.

13 பைசாக்களுக்கு மேற்படாத தீர்வையுடைய மிகச்சிறிய ஆக்ரமிப்புகளை விட்டு விடலாம். 

கிராம நிர்வாக அலுவலர் முதலாவது ஆண்டில் ஆக்ரமிப்பு குறிப்பில் தாக்கல் செய்து அதனை விட்டு விடவட்டாசியர் ஆணை பெற வேண்டும். 

தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஆக்ரமிப்பு குறிப்பு தாக்கல் செய்யாமல் ஆணை விவரத்தை மட்டும் அடங்கலில் காண்பித்தால் போதுமானது ஆகும்.

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறையினருக்கு சொந்தமான இடங்களில் செய்யப்படும் ஆக்ரமணங்களை அத்துறையினரே காலி செய்ய வேண்டும். தேவையெனில் வருவாய்த்துறையினர் ஒத்துழைப்பு நல்கிடலாம்.

பஞ்சாயத்துக்கு
  ஒப்படைக்கப்பட்ட புறம்போக்குகளில் செய்யப்பட்டுள்ள ஆக்ரமணங்களை  வருவாய்த்துறையினர்  காலி செய்யவேண்டும்.

நகராட்சி மற்றும் பேரூராட்சி
  பகுதிகளில் தெருக்கள் பொது இடங்கள் போன்ற இடங்களில்  செய்யப்படும்  ஆக்ரமிப்புகளை காலி செய்ய தமிழ்நாடு நகர உள்ளாட்சி சட்டம் 9/98ன் படி அத்துறையினரே நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

கோவில் புறம்போக்குகளில் கோவில் சம்பந்தமான கடமைகளளை நிறைவேற்று வதற்கு செய்யப்படும்
  ஆக்ரமிப்புகள் தவிர ஏனையவை ஆட்சேபகரமான வையாகும்.

ஆக்ரமண சட்டத்திற்குட்படாத பொது இடங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை காலி செய்ய தமிழ்நாடு பொது கட்டிடங்கள்
  ஆக்ரமிப்புகள் அகற்றுதல் சட்டம் 1976 ன் படி வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மாவட்ட அலுவலக நடைமுறை நூல் (VOL.2)